லக்னோவில் ஏர் இந்தியா விமான டயர் வெடித்தது-பயணிகள் தப்பினர்
லக்னோ: லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
இன்று காலை 9.45 மணிக்கு லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் ஐசி 412 விமானம், டேக் ஆபுக்குத் தயாரானது. அப்போது ஒரு என்ஜினிலிருந்து புகை வருவதைப் பார்த்த பைலட், அவசரகால பிரேக்கைப் போட்டு நிறுத்தினார். அப்போது இடது புற டயர்களில் ஒன்று பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள் பீதியடைந்தனர்.
இருப்பினும் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. அந்த விமானத்தில் 140 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.
டயர் வெடித்தவுடன் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனர். பின்னர் உபரி வி்மானம் வரவழைக்கப்பட்டு அதில் ஏற்றி அனைவரும் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதிக சூடு காரணமாக என்ஜினில் புகை வந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.