ஆஸி. தேர்தலில் இழுபறி-சுயேச்சைகளுக்கு வலை வீசும் பிரதமர் ஜூலியா, டோனி அபாட்
யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கும் வாய்ப்பில்லை என்பதால் இங்கிலாந்தைப் போல கூட்டணி ஆட்சி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர் ஜூலியா. ஆனால் அந்தப் பெருமையுடன் அவர் நீடிக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட பறி போகிறது.
76 இடங்களைப் பெறும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சி அமைக்க முடியும். ஆனால் ஜூலியா தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கோ அல்லது டோனி தலைமையிலான லிபரல் கட்சிக்கோ அது கிடைக்கும் வாய்ப்பு இல்லை.
மேலும், டோனி அபாட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கே அதிக இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. எனவே அந்தக் கூட்டணி ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கூட்டணிக்கும் இதுவரை மெஜாரிட்டி பலம் கிடைக்கவில்லை.
இரு கட்சிகளுக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால், சுயேச்சைகளின் ஆதரவு பெறும் கட்சிக்கே ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்திய பாணியில் சுயேச்சை எம்.பிக்களுக்கு இரு தரப்புமே வலை வீச ஆரம்பித்துள்ளதாம். இதனால் குதிரை பேரமும் களை கட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த 1940ம் ஆண்டு கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. அதன் பிறகு தனிக் கட்சி ஆட்சியே அமைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மீண்டும் கூட்டணி ஆட்சி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.