தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்-வானிலை மையம்
வங்கக் கடலின் மீது வளிமண்டலத்தில் காற்றில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. மேலும் வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், காவிரி டெல்டா பகுதிகள், திருச்சி, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெயது வருகிறது.
சென்னை நகரில் நேற்று பிற்பகல் வரை மழை வெளுத்துக் கட்டியது. இதில் பல பகுதிகளில் வெள்ளக் காடானது. பிற்பகலில் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்தது.
இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் நேற்று மிதமானது முதல் கன மழை பெய்து உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனேக பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மற்றும் ராமநாதபுரத்தில் தலா 17 செ.மீ மழை பெய்து உள்ளது. சங்கராபுரத்தில் 15 செ.மீ மழையும், திருக்கோவிலூர், தர்மபுரியில் 11 செ.மீ மழையும், பொன்னேரி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் 8 செ.மீ. மழையும், தொழுதூர், விருதாச்சலம், வேதாரண்யம், கோத்தகிரி, திண்டுக்கல் பகுதிகளில் 7 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
பயிர்கள் பாதிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 400 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கேரட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு ஆகியவை நீரில் மூழ்கிப் போய் விட்டன.
கிளென்மோர்கன் பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் 80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஊட்டி நகரில் 7 செமீ மழை பெய்தது.