கிளிநொச்சியைக் கைப்பற்றிய போது ராணுவத்துக்கு பெரும் இழப்பு! - பொன்சேகா
இலங்கை அரசால் ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டு, தனது ஜெனரல் தரநிலைப் பட்டத்தையும் பதக்கங்களையும் இழந்துள்ள சரத் பொன்சேகா தனது பதவிக் காலத்தில் 4786 இராணுவ அதிகாரிகளை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தியதாக இலங்கை அரச தரப்பினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது ராணுவத்தின் பல முனைகளிலிருந்தும் இருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.
கிளிநொச்சியைக் கைப்பற்றிய போது புலிகளால் ராணுவம் கடுமையான இழப்புகளைச் சந்தித்திருந்தது.
அப்போது இராணுவத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்காக படையினர் தப்பியோடும் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருந்தது. இல்லையேல் நாம் கிளிநொச்சியில் இருந்து ஓமந்தைக்குப் பின்வாங்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும்.
ஒரு அங்குலம் கூட ராணுவத்தால் முன்னேற முடியாது போயிருக்கும்.
இதுபற்றி பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் ஆலோசித்தேன். அதன்பிறகுதான் தப்பியோடிய படையினர் இராணுவ நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டனர்.
எனது பதவிக்காலத்தில் இராணுவ நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்ட அதிகாரிகள், படையினரில் பெரும்பாலானவர்கள் தப்பியோடிப் பிடிபட்டவர்கள்தான்," என்றார்.
அதேநேரம் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவியில் இருந்த போது இராணுவ நீதிமன்றங்களின் தீர்ப்பின் பேரில் சுமார் 5000 படையினர் இராணுவத்தை விட்டு விலக்கப்பட்டதாக இலங்கை இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது.
இரண்டு பிரிவுகளாக இந்தப் படையினர் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பொதுவான இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 165 அதிகாரிகள் விலக்கப்பட்டனர்.
மேலும், 4788 இதர தரங்களைச் சேர்ந்த படையினர் மாவட்ட இராணுவ நீதிமன்றங்களின் தீர்ப்பையடுத்து இராணுவத்தில் இருந்து விலக்கப்பட்டனர்.
இவர்களில் கிழக்கில் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவும் அடங்குவார்.