தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
சென்னை: தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மேலும் 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்திலும், புதுவையிலும் நல்ல மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் டெல்டா பகுதிகளிலும் கன மழை பெய்துவருகிறது.
சென்னையில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு பரவலாக கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. வியாசர்பாடி பாலத்தின் கீழ் வழக்கம் போல 3 அடிக்குத் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மழை மேலும் 48 மணி நேரத்திற்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர மாநில கடல் பகுதிகளில் வழிமண்டலத்தில் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வட மேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை முதல் சென்னையில் இதமான வானிலை நிலவி வருகிறது. அவ்வப்போது தூறலும், சிறு மழையும் காணப்படுகிறது.