நக்சல்களிடமிருந்து இதுவரை ஒரு பதிலும் இல்லை-ப.சிதம்பரம்
டெல்லி: பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு விடுத்த அழைப்புக்கு இதுவரை மாவோயிஸ்டுகளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை என்று கூறியுள்ளார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவி வருவது சற்றும் குறையவில்லை. தீவிரவாதிகள் ஊடுறுவலைத் தடுக்க அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.
பேச்சுவார்த்தைக்கு வருமாறு விடுத்துள்ள அழைப்பை அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பு ஏற்று பேச்சுவார்த்தைக்கு வரும் என நம்புகிறோம்.
அதேசமயம், மாவோயிஸ்ட் நக்சலைட்களுக்கு விடுத்த அழைப்புக்கு இதுவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தப் பதிலும் வரவில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு என தொடர்ந்து வன்முறை தொடர்ந்து வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. காஷ்மீருக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
இந்தியாவில் தற்போது காவி தீவரவாதம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. புதிய பரிமாணத்தில் இது வளர்ந்து வருகிறது. இதை ஒடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றார் சிதம்பரம்.