குறைந்த காற்றழுத்த நிலை: தமிழகத்தில் கன மழை பெய்யும்-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் விட்டு விட்டு தொடர்ச்சியாக பெய்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மழைக்காலம் இன்னும் சென்னையில் தொடங்காவிட்டாலும் கூட மழைக்காலத்தில் இருப்பது போல வானம் எப்போதும் இருண்டு காணப்படுகிறது.
இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாகவும், இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக்கடலின் மத்திய மேற்கு பகுதியிலும், தமிழகத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக காரைக்கால் மற்றும் நாகப்பட்டிணத்தில் 5 செ.மீ., சோழவரத்தில் 4 செ.மீ., பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், தரங்கம்பாடி, தேவாரம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அங்கேயே நிலை கொண்டுள்ளது. இதனால், மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது புதன்கிழமையன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும், வட மாவட்டங்களில் கனமழை இருக்கும். அனேக இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.
தென்மாவட்டங்களில் குறைந்த அளவில் மழை பெய்யலாம். சென்னையைப் பொருத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும். அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.