உத்தபுரத்தில் கலவரத்தை தூண்டுகிறது சிபிஎம்-பஞ்சாயத்துத் தலைவர் வழக்கு
மதுரை: உத்தபுரத்தில் கலவரத்தை தூண்டி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உத்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
உத்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் சிலர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 1980-ம் ஆண்டு உத்தபுரத்தில் ஜாதி பிரச்சனை இருந்தது. பின்பு 1991-ம் ஆண்டில் இருந்து 2007-ம் ஆண்டு வரை எந்த வித ஜாதிப் பிரச்சனையும் இல்லை.
ஆனால், கடந்த 2008-ம் ஆண்டு உத்தபுரத்தில் தீண்டாமை சுவர் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அரசுக்கு தவறானத் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அங்கு தேவையில்லாத பிரச்சனைகளையும், வன்முறைகளையும் தூண்டிவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்து வருகின்றது.
எனவே, இது குறித்து விசாரணை நடத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.