கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி
கும்பகோணம்: கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்றக் கவுன்சிலர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அருகே உள்ள தேவனாஞ்சேரி ஊராட்சி மன்ற கவுன்சிலராக இருப்பவர் கணேசன். இவர் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார்.
மதுபானக் கடைகளில் நடைபெறும் முறைகேட்டை தடுக்கக் கோரி திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைக்க முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் பாய்ந்து வந்து அவரைக் காப்பாற்றினர். மேலும், அவர் மீது கும்பகோணம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவுன்சிலரின் இந்த திடீர் தீக்குளிப்பு போராட்டம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.