செப். 12 முதல் திமுக நிர்வாகிகளுடன் கருணாநிதி சந்திப்பு-கலந்தாய்வு நடத்துகிறார்
சென்னை: முதல்வர் கருணாநிதி மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்துவது என்று திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
கலந்தாய்வுக் கூட்டங்கள் செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
தினமும் 2 கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெறும். மாவட்ட, ஒன்றிய, நகரப் பகுதி நிர்வாகிகள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கலந்தாய்விற்கு வரும்போது நிர்வாகிகள் அனைவரும் தாங்கள் நடத்திய பொதுக்கூட்டங்களின் விபரங்களை கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்குவதால் ஒவ்வொரு கட்சியும் இதுபோன்ற கலந்தாய்வுகளில் இறங்கியுள்ளன. சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இதுபோன்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இப்போது திமுக நடத்தவுள்ளது.
நாளை கலெக்டர்கள் மாநாடு:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நாளை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறுகிறது.
ஜார்ஜ் கோட்டையில் நாமக்கல் மாளிகை 10வது தளத்தில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டில் தலைமை உரையாற்றுகிறார்.