ஆந்திராவை நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்தம்-தமிழகத்தில் மழை குறையும்
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வந்தது. இந்த மழையால் தமிழகமே வெள்ளக்காடாகிப் போனது.
தற்போது தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து இப்போது ஆந்திரத்தின் கரையோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் எதிரொலியாக தென்மேற்குப் பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
இதன் எதிரொலியாக ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் கர்நாடகம், கேரளத்தில் பரவலாக பலத்த மழை பெய்யக் கூடும். வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவையில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வியாழக்கிழமை பெய்யக் கூடும். எனினும், இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழக்கக் கூடும். இதனால், தமிழகம், புதுவையில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது.
வட தமிழகம் மற்றும் புதுவையின் கடலோரப் பகுதிகளில் வடமேற்கு திசையில் இருந்தும், தென் தமிழகத்தில் மேற்கு திசையில் இருந்தும் மணிக்கு 45 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை பலத்த கடற்காற்று வீசும். இதனால், ராட்சத அலைகள் வீசுவதோடு கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நகர்ந்திருப்பதால் சென்னையில் மழை விட்டுள்ளது. அதேசமயம் லேசான வெயிலுடன் அவ்வப்போது வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது.
சென்னையில் வியாழக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.