தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா
இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு கிருஷ்ணா பதிலளிக்கையில்,
கடந்த 2008-ம் ஆண்டில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது நடத்திய தாக்குதல் குறித்து 15 வெவ்வேறு சம்பவங்கள் பற்றிய தகவல் வந்தது. இதில் 6 மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், 17 மீனவர்கள் காயம் அடைந்ததாகவும் தெரியவந்தது.
சமீபத்தில் நடந்த ஒரு தாக்குதலிலும் தமிழக மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 3 பேர் தாக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து இலங்கை கடற்படையிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்களிடம் தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் வலியுறுத்தப்படுகிறது.
தற்போது இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலை நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. நடந்து முடிந்த ஒருசில தாக்குதலுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால் நாம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முன்னுரிமை அளித்து இலங்கை கடற்படையிடம் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
மனிதாபிமான அடிப்படையில் இலங்கை கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறோம்.
கடந்த 2008-ம் ஆண்டு போடப்பட்ட கடலோர எல்லை குறித்த ஒப்பந்தத்தின்படியே தமிழக மீனவர்கள் செயல்படுவதாகவும், அப்படிப்பட்ட சூழலிலும் அவர்கள் தாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளோம். இதனை இலங்கை அரசு நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளோம்.
இதைத்தொடர்ந்து தற்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையும், கடலோர காவல் படையும் தாக்குதலை நிறுத்தியுள்ளன.
சென்னையில் கடந்த ஆண்டு தட்கல் முறையில் 73,236 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 1,07,345 பாஸ்போர்ட்டுகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு உள்ளனர்.
மேலும் 2007ம் ஆண்டில் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்தவர்கள் 5,90,315 பேர். இதில் சென்னையில் இருந்து 2,99,488 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2008 ம் ஆண்டில் 6,07,259 பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த 2009 ம் ஆண்டில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 5,32,431 ஆக குறைந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் மதுரை மற்றும் திருநெல்வேலியில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படும் என்றார்.