30ம் தேதி கொழும்பு செல்கிறார் நிரூபமா ராவ்
முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் இன்னும் முழுமையாக சொந்த கிராமங்களில் குடியமர்த்தப்படவில்லை. அவர்களது வாழ்க்கை பெரும் நரகமாக மாறிப் போய் விட்டது. அடிப்படை வசதிகள், சுதந்திரம் என எதுவும் இல்லாமல் சொந்த நாட்டிலேயே அடிமைகள் போல உள்ளனர்.
இவர்களுக்கான மறு வாழ்வு நடவடிக்கைக்குத் தேவையான நிதியை இந்தியா அள்ளி வழங்கி வருகிறது. ஆனால் இதுவரை போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வந்து முகாம்களில் அடைப்பட்டுள்ள தமிழர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய முதல்வர் கருணாநிதி, மறுகுடியேற்ற, மறுவாழ்வுப் பணிகளை இந்தியா முடுக்கி விட வேண்டும். இதுதொடர்பாக இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்பி பார்வையிட்டு வரச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் நிரூபமா ராவ் சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து வருகிற 30ம் தேதி நிரூபமா கொழும்பு செல்கிறார். அங்கு நான்கு நாட்கள் தங்கி யாழ்ப்பாணம், வவுனியா, திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மறுகுடியேற்ற வேலைகள், விரிவாக்கப் பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக தெரிகிறது.
இதேபோல, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வரும் செப்டம்பர் மாதம் இலங்கை செல்ல உள்ளார். இதுதொடர்பான முன்னேற்பாடுகள் குறித்தும் நிரூபமா ராவ் ஆய்வு நடத்துவார் என தெரிகிறது.
சமீபத்தில் ராஜபக்சேவின் தம்பியும், அமைச்சருமான பசில் ராஜபக்சே டெல்லி வந்து இந்தியத் தலைவர்களை சந்தித்துப் பேசினார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நிரூபமா கொழும்பு செல்லவுள்ளார்.
நிரூபமாவை சந்திக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு:
இதற்கிடையே, கொழும்பு வரும் நிரூபமாவை சந்திப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி. அரியநேத்திரன் கூறுகையில்,
இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அவர்களுக்கான வீடு கட்டும் திட்டங்கள், விமான மற்றும் துறைமுக விரிவாக்கம் ஆகியவற்றில் இந்தியாவின் பங்கீட்டினை ஆராய்வதற்காக நிரூபமா ராவ் இலங்கை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் அவரது நிகழ்ச்சிகள் பற்றி எனக்கு தெரியாது. இருப்பினும் மீள் குடியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிரூபமா ராவ் பார்வையிடுவது என்பது, தமிழ் மக்களுடன் தொடர்புடையது. இதனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களின் பிரச்சனைகளை எடுத்துரைப்பதற்காக அவரை சந்திக்க வேண்டியுள்ளது.
தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் உள்ளிட்ட எம்.பி.க்கள் சிலர் நாட்டில் இல்லை. 30ஆம் தேதி வரும் நிரூபமா ராவ், மீண்டும் இந்தியா திரும்ப மூன்று நாட்கள் ஆகும் என்பதாலும், தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.
குண்டுகள்-ஆயுதங்கள் பறிமுதல்:
இதற்கிடையே, முல்லைதீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகளும், ஆயுதங்களும் சிறப்பு போலீசாரால் அதிரடிப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என இலங்கை ராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குண்டை வெடிக்கச் செய்யக்கூடிய டெட்டனேட்டர் 258, எம்.ஜி.எம்.ஜி வகை துப்பாக்கி 2696, கைக்குண்டு 306, மோட்டார் குண்டு 35 மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்கள் இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றார்.