பற்றி எரிந்த நானோ கார்... 6 மாதங்களில் மூன்றாவது பயங்கரம்!
டெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் நானோ வாடிக்கையாளர்களை மிரள வைத்துள்ளது என்றால் மிகையல்ல!
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுபவர் ரவீந்திர நாராயணன். கடந்த மே மாதம் இவர் டாடா நானோ கார் வாங்கினார். 38000 கிமீ ஓடியுள்ள இந்தக் காரை ஒருமுறை கம்பெனி சர்வீஸ் பண்ணியுள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று நாராயணனின் ஓட்டுநரும் மேலாளரும் அந்தக் காரில் கன்னாட் பிளேஸிலிருந்து ஹோஸ் காஸுக்கு வந்துள்ளனர். பின்னர் அரபிந்தோ மார்க்கில் அந்தக் காரை நிறுத்தியுள்ளனர். அப்போது காருக்குள் நாராயணனின் மேலாளர் உட்கார்ந்திருந்தார். சரியாக 11.30க்கு கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை உணர்ந்த மேலாளர் சட்டென்று கதவைத் திறந்து வெளியேறியுள்ளார்.
முதலில் பின்பக்கமிருந்துதான் புகை வந்துள்ளது. அதைப் பார்த்து ஓட்டுநர் பாட்ரிக் வருவதற்குள் வேகமாகப் பரவி இரண்டே நிமிடங்களில் மொத்த காரும் பஸ்பமாகிவிட்டது.
ஏற்கெனவே வதோத்ரா மற்றும் மும்பையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரு நானோ கார்கள் தீப்பிடித்து எரிந்தன. 6 மாதங்களில் நடந்துள்ள மூன்றாவது நானோ தீ விபத்து இது.
மூன்று மாதங்களுக்கு முன்புதான் டாடா நானோ மிகவும் பாதுகாப்பானது என்று டாடா மோட்டார்ஸ் சான்றிதழ் வழங்கியது.