அதிமுக, திமுக பாணியில் கோவையில் பொதுக் கூட்டம் போடும் காங்.
கடந்த நான்கு ஆண்டு காலமாக பெரிய அளவில் போராட்டம் எதிலும் பங்கேற்காமல் கொடநாட்டில் ஓய்வு, சென்னையில் ஓய்வு என இருந்து வந்த ஜெயலலிதா சமீபகாலமாக பொதுக் கூட்டங்களைப் போட்டு கூட்டத்தைக் கூட்டி வருகிறார்.
இதுபோல அவர் கோவையில் போட்ட கூட்டத்திற்கு பெருமளவு கூட்டம் கூடியதால் அதிமுகவினர் அதை திருப்புமுனையாக கருதுகின்றனர். இதைத் தொடர்ந்து கோவையில் திமுகவும் அதே இடத்தில் போட்டிக் கூட்டத்தைப் போட்டு கூட்டத்தைக் காட்டியது.
இந்த நிலையில் தற்போது காங்கிரஸும் கோவையில் பொதுக் கூட்டம் போடப் போகிறது. பிரணாப் முகர்ஜியும், ப.சிதம்பரமும் பேசப் போகிறார்கள்.
முன்னாள் நிதியமைச்சர் சி.சுப்ரமணியத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு நாணயத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிடுகிறது. இதற்கான விழா கோவையில் இன்று நடைபெறுகிறது.
கோவை அவினாசி சாலையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் ஆடிட்டோரியத்தில் மாலை 5 மணிக்கு இவ்விழா நடைபெறுகிறது.
இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவுக்குப் பின், கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் பிரணாபும், சிதம்பரமும் பேசவுள்ளனராம். இதில், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிகளுக்காக இன்று மாலை 4 மணியளவில் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவே டெல்லி திரும்புகிறார். அவர் சென்னை வந்து முதல்வரை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி கூட்டங்களைப் போட்டு தங்களது பலத்தை காட்டிக் கொண்டும், பரீட்சித்துப் பார்த்துக் கொண்டும் இருப்பதால், காங்கிரஸும் தனது பலத்தைக் கூட்ட பொதுக் கூட்டத்தில் இறங்கியிருப்பதாக கருதப்படுகிறது.