சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் 4000 ஏக்கர் சொத்து பறிமுதல்!
சத்யம் நிறுவனத்தில் ரூ 24000 கோடி வரை மோசடி செய்துள்ளதாக ராமலிங்கராஜு மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இப்போது ஜாமீனில் உள்ள ராமலிங்க ராஜு, ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கிடையே ராஜுவின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணியில் இறங்கியுள்ளது சிபிஐ.
முதல்கட்டமாக, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு உள்பட பல இடங்களில் உள்ள சொத்துக்களை கணக்கெடுத்துள்ளனர் அதிகாரிகள். இதில் ஆந்திராவில் மட்டும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் 347 சொத்துக்கள் உள்ளன.
இவற்றை சிபிஐ வசம் உடனே அவர் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஒப்படைக்கவில்லை. எனவே இப்போது சிபிஐயே அவற்றை பறிமுதல் செய்துள்ளது. மொத்தம் 4000 ஏக்கர் நிலங்களை பறிமுதல் செய்துள்ளது சிபிஐ.
இவற்றில் ரங்கா ரெட்டி மாவட்டம் லோயப்பள்ளியில்தான் அதிக நிலங்களை ராஜு வாங்கிக் குவித்திருந்தார். அவை மொத்தமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, ராமலிங்க ராஜுவின் ஜாமீனை எதிர்த்து ஆந்திர நீதிமன்றத்தில் சிபிஐ அப்பீல் செய்துள்ளது.