அமைச்சரவையில் பங்கு தரும் கூட்டணியில் இடம் பெறுவோம்-ப.சிதம்பரம்
கோவையில் நடத்திய அதிமுக கண்டனக் கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குக் கூடிய கூட்டம் எதிர்க்கட்சியினரை திகைக்க வைத்தது. எதிர்க்கட்சியாக இருந்து இத்தனை பேரை அதிமுக கூட்டி வந்துள்ளதே என்பதே அந்த ஆச்சரியம்.
இதையடுத்து அதே இடத்தில் திமுக சார்பில் ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்டினார்கள். அதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.
இந்த வரிசையில் தற்போது காங்கிரஸ் சார்பில் நேற்று இரவு ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. ஆனால், திமுக, அதிமுக நடத்திய வ.உ.சி. திடலில் அல்லாமல், கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது.
இதில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.
பொதுக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில்,
இந்த மேடையில் பேசியவர்கள் தங்களின் ஆதகங்களை கொட்டிவிட்டு போனார்கள். இங்கு பலரும் பல கேள்விகளை கேட்டு விட்டு போனார்கள். இந்தியாவையே ஆளும் காங்கிரஸ் கட்சி, ஏன் தமிழத்தில் மட்டும் ஆட்சி செய்ய முடியாமல் போனது. அதே ஆதங்கம் எனக்கும் இருக்கிறது. 40 வருடங்களாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வராதா என்ற கனவு எனக்குள்ளும் இருக்கிறது. என்ன, அதை நான் வெளியில் சொன்னதில்லை. என்னுடைய சிறு வயதில் எப்போது காங்கிரசில் இணைந்தேனோ, அப்போதிலிருந்தே இந்த ஆதங்கம் இருக்கிறது.
2004ல் நாம் போட்டியிட்ட போது 145 இடங்களே கைப்பற்றினோம். பாஜகவை விட 7 இடங்களே அதிகம் பெற்றிருந்தோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எல்லா ஊடகங்களும் அடித்துச் சொன்னது பாஜகதான் ஆட்சியை பிடிக்கும் என்று.
ஆனால் மக்களோ போன முறை 145 மார்க் நமக்கு போட்டார்கள். இந்தமுறை 206 மார்க் போட்டார்கள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நாம் ஒழுங்காக படித்து, தேர்வு எழுதியதாலேயே மக்கள் நாம் நன்றாக படிக்கிறோம் என்பதற்காக இந்த மார்க்கை போட்டார்கள்.
அதேபோல மார்க்கை நாம் தமிழகத்திலும் எடுக்க, நாம் நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். வரும் தேர்தலுக்குப் பிறகு, நிச்சயமாக ஆட்சி அதிகாரத்தில் நமக்கும் அதிகாரம் அளிக்கக் கூடிய கட்சியோடுதான் இருக்கப் போகிறோம். அதைத்தான் இங்குள்ள மக்களும் எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் அடுத்த முறை அமையும் கூட்டணி நாம் அதிகாரம் செலுத்தக் கூடிய கூட்டணியாகவே இருக்க வேண்டும். இருக்கும் என்றார்.
ஆட்சியில் பங்கு என்பதையே கடந்த சில வருடமாக தமிழக காங்கிரஸார் கோரி வருகின்றனர். ஆனால் அந்தப் பேச்சுக்கள் எழும்போதெல்லாம் காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு காங்கிரஸ் தலைவர்களைத் தட்டி வைக்கும். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரமே ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ள கூட்டணியில்தான் இடம் பெறுவோம், அடுத்த தேர்தலுக்குப் பின்னர் பங்கு கிடைக்கும், கிடைக்க வேண்டும் என பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.