தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தீர்ப்பு-வீரமணி, இல.கணேசன் வரவேற்பு
சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தி.க. தலைவர் கி.வீரமணி, பாஜக தலைவர் இல.கணேசன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பஸ் அதிமுகவினரால் இலக்கியம்பட்டியில் தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியாயினர்.
இந்த வழக்கில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.
இந்த தீர்ப்பு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது,
வளர வேண்டிய பிள்ளைகள் அநியாயமாக தீக்கிரையானதை நினைக்கையில், அவர்கள் பெற்றோர்கள், உடன் இருந்த மாணவிகளின் மனநிலையை பார்க்கும்போது இந்த தீர்ப்பு சமூக விரோதத்திற்கு எதிராக அளிக்கப்பட்டதாகும்.
இதில் கட்சிக் கண்ணோட்டத்திற்கோ, ஜாதி மத கண்ணோட்டத்திற்கோ இடமே கிடையாது. மேலும், இதில் சட்டக் கண்ணோட்டம் மட்டுமல்ல, நியாயக் கண்ணோட்டமும் உள்ளது என்று அவர் கூறினார்.
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியதாவது,
சட்டம் தனது பணியை செவ்வனே செய்துள்ளது. தாமதமாக தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்த பிறகே உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. கல்லூரி மாணவிகள் பயணம் செய்த வாகனத்தை தாக்கி ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு ஈடு இணை கிடையாது என்று அவர் கூறினார்.