செப்டம்பர் 7ல் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா: டாக்டர் சேதுராமன் அறிவிப்பு
மதுரை: செப்டம்பர் 7-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்தவிருப்பதாக மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் சேதுராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை உருவாக்கி, அதை இந்திய அரசமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து சமூக நீதியை காத்தவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அவருக்கு வரும் செப்டம்பர் 7-ம் தேதி சென்னை வானகரத்தில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
மதுரையில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிந்து, செப்டம்பர் 12-ம் தேதி புதிய பொலிவுடன் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும். அல்லது திருச்சி விமான நிலையத்திற்காகவது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று அவர் கூறினார்.