கவர்ச்சிகரமான பேச்சை விடுத்து உதவி செய்யுங்கள்-தமிழக தலைவர்களுக்கு கேபி வேண்டுகோள்
விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கேபி என்கிற பத்மநாதன். மலேசியாவில் இலங்கை புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு கொஞ்ச காலம் அமைதியாக இருந்த இவர், இப்போது தொடர்ந்து ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக பேட்டிகள் அளித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி:
தற்போது இலங்கை தமிழர்களுக்கு சமரசத்துடன் கூடிய இணக்கமான சூழ்நிலையும், ஒற்றுமையும்தான் தேவை. அதை விடுத்து எதிர்க்கும் போக்கு மற்றும் மனக் கசப்பு போன்றவை தேவையில்லை.
தற்போது நான் கைது செய்யப்பட்டிருந்தாலும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மறுவாழ்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் சமூக சேவகராக உள்ளேன். இந்த நிறுவனம் இலங்கை அரசின் ஆதரவுடன் செயல்படுகிறது.
தற்போது நான் டெலிபோன், இ மெயில், பேக்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தும் நிலையில் உள்ளேன். எங்கள் மக்களுக்கு தற்போது அரசியல்வாதிகள் தேவையில்லை. மனிதாபிமானிகள் தான் தேவை.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது மறுவாழ்வு, மற்றும் மறு சீரமைப்பு சிறப்பு முகாம்களில் உள்ளனர். அவர்களின் வாழ்வு மீண்டும் நல்ல முறையில் அமைய வேண்டும். அதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே செய்து உதவி வருகிறார்.
கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம்களில் இருக்கும் அவர்களை இன்னும் 6 மாதங்களில் விடுவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். வட கிழக்கு மாகாண மறுவாழ்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.
அகதிகளின் குழந்தைகள் கல்வி பயில பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. போரில் அனாதையான குழந்தைகளை பராமரிக்க வவுனியாவில் அன்பு இல்லம் தொடங்க திட்டமிட்டுள்ளது. மேலும் சண்டையின் போது கை, கால்கள் மற்றும் பார்வை இழந்தவர்களும் இங்கு பராமரிக்கப்பட உள்ளனர்.
போரில் காயம் அடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக வவுனியா அருகே ஒரு மாதிரி கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 200 ஏக்கர் பரப்பளவில் ஒரு பண்ணை தொடங்கத் திட்டமிடப் பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் வாழ்வை சீரமைக்க அங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கிளிநொச்சி அல்லது வவுனியாவில் அமைக்கப்படும்.
போரில் விடுதலைப்புலிகள் தோல்வி அடைந்தால் எங்கள் மக்களையும் இயக்கத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை பிரபாகரன் என்னிடம் ஒப்படைத்துள்ளார். அந்த கடமையை நான் செய்து வருகிறேன்.
இந்த நிலையில் இலங்கை தமிழர்கள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் தேவையற்ற அலங்கார கவர்ச்சிகரமான வார்த்தைகளால் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் வீணாக பேச வேண்டாம். எங்கள் வாழ்வுக்கு தேவையான ஆக்க பூர்வமான உதவிகளை செய்யுங்கள்..." என்று கூறியுள்ளார்.