பிதரமரே இறங்கி தரையைத் துடைத்தாலும் ஸ்டேடியங்கள் தயாராகாது-மோடி நக்கல்
அகமதாபாத்: பிரதமரே களம் இறங்கி தரையைத் துடைத்து வேலை செய்தாலும், காமன்வெல்த் போட்டிகளுக்கான ஸ்டேடியங்கள் உரிய காலத்தில் தயாராவது சாத்தியமில்லை என்று நக்கலடித்துள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
காமன்வெல்த் போட்டிகளுக்கான ஸ்டேடியங்கள் இன்னும் தயாராகவில்லை. இதுகுறித்து விமர்சித்துள்ளார் நரேந்திர மோடி. அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், காமன்வெல்த் போட்டியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பிரதமரே இறங்கி தரையைத் துடைத்து வேலை செய்தாலும் கூட போட்டி தொடங்குவதற்குள் ஸ்டேடியங்கள் தயாராகும் என எனக்குத் தெரியவில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பே டெல்லிக்குப் போட்டியை ஒதுக்கி விட்டனர். அப்போதே பணிகளையும் தொடங்கினர். ஆனால் இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதை பேசாமல் போட்டியை அகமதாபாத்திற்கு ஒதுக்கியிருந்தால் இன்னேரம் எங்களது மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வேலையை முடித்து ஸ்டேடியங்களைக் கொடுத்திருப்பார்கள்.
நானும், குஜராத்தின் வளர்ச்சியும் பிரிக்க முடியாத அம்சங்கள். குஜராத்துக்கு சேவை செய்வதை நாட்டுக்கு செய்யும் சேவையாக நான் கருதுகிறேன். என்னையும், குஜராத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. குஜராத்தில் உள்ள ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். இந்த மாநில மக்களுக்கு வேலை கிடைக்க வேண்டும், வளமுடன் வாழ வேண்டும் என்பதே எனது எண்ணம். இது நாட்டுக்கு நான் செய்யும் சேவை.
இந்த நேரத்தில் டெல்லி சுல்தான்களுக்கு நான் சவால் விடுகிறேன். வளர்ச்சித் திட்டங்களில் எங்களுடன் போட்டி போட உங்களால் முடியுமா என கேட்கிறேன் என்றார் மோடி.