வட கொரியா மீது மீண்டும் பொருளாதாரத் தடை அறிவித்த யுஎஸ்!
வாஷிங்டன்: அணு ஆயுத தயாரிப்பு விவகாரத்தில் தனக்கு அடங்க மறுக்கும் வட கொரியாவுக்கு எதிராக மீண்டும் பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது அமெரிக்கா.
வட கொரியாவின் தலைவர் இரண்டாம் கிம் ஜோங், சீனா சென்று திரும்பிய அடுத்த நாளே இந்தத் தடையை அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வட கொரியாவின் அணு ஆயுத உற்பத்தியையும், வர்த்தகத்தையும் முடக்கும் நோக்கிலேயே மீண்டும் இந்தப் பொருளாதாரத் தடையை விதித்துள்ளதாக அமெரிக்கா விளக்கம் தெரிவித்துள்ளது.
"வட கொரியாவின் ரகசிய அணு ஆயுதத் திட்டத்துக்கு உடந்தையாகவுள்ள நிறுவனங்கள், தனி நபர்களின் சொத்துக்களை முடக்கியும், அவர்கள் அமெரிக்காவின் நிதி அமைப்பு முறையினை பயன்படுத்த முடியாத வகையிலும் இந்த பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவிதத்தில் வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டத்துக்காக போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்பாட்டின் மூலம் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள அந்நாட்டின் ரகசிய பிரிவுக்கு எதிராக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுத ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டுள்ள கிரீன் பைன் அசோசியேட் கார்ப்பரேஷன் மற்றும் அதன் தாய் நிறுவனத்தின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கொரியாவின் நிறுவனங்களான தேசோங், கொரியா ஹியூங்ஜின் வர்த்தக நிறுவனம் ஆகியவற்றுக்கும் இந்த புதிய பொருளாதாரத் தடை பொருந்தும். இந்த இரு நிறுவனங்களும் ஈரான், சிரியாவுடன் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன," என்று அமெரிக்கா தனது நீண்ட விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
பேசலாம்...
அதேநேரம், வட கொரியாவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சு நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆனால் உபயோகமான வகையில் பேச்சு இருக்கும் என்றால் மட்டுமே வட கொரியாவுடன் பேச்சு நடத்த விரும்புவதாகவும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு சீனா ஆதரவு தெரிவித்து வருவதால், இந்தத் தடை பற்றி வட கொரியா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.