எஸ்ஐ-யை கொல்ல முயன்ற வழக்கு: அமைச்சரின் மகனுக்கு நீதிமன்றம் கெடு
திருவனந்தபுரம்: சப் இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட வழக்கில் அமைச்சர் மகன் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி கெடு விதித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பொது மருத்துவமனை சந்திப்பில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி இந்திய மாணவர் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேறி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் எஸ்.ஐ. ஒருவர் தாக்கப்பட்டார்.
இதையடுத்து எஸ்.ஐ.-யை கொல்ல முயன்றதாக பினீ்ஷ் கொடியேறி உள்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை திருவனந்தபுரம் அதிவிரைவு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. பலமுறை சம்மன் அனுப்பியும் பினிஷ் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
கடந்த மாதம் விசாரணை நடந்தபோது பினீஷை ஆகஸ்ட் 31-ம் தேதி ஆஜர்படுத்துவதாக அவரது வழக்கறிஞர்கள் கூறினர். ஆனால் நேற்று முன்தினம் பினீஷ் ஆஜராகவில்லை. இதையடுத்து வரும் 14-ம் தேதி பினீஷை கண்டிப்பாக நேரில் ஆஜராக்க வேண்டும் என்று நீதிபதி அப்துல் ஜப்பார் உத்தரவிட்டார்.