For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மறு குடியேற்றம் தொடர்பான பணிகள் திருப்திகரமாக உள்ளது-நிரூபமா ராவ்

Google Oneindia Tamil News

Nirupama Rao
கொழும்பு: மறு குடியேற்றம், மறுசீரமைப்பு, மறுவாழ்வுப் பணிகள் திருப்திகரமாக உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்ற நிரூபமா ராவ், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திரிகோணமலை ஆகிய தமிழர் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். முள் வேலி முகாமைப் பார்வையிட்டார், பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் தமிழர் பிரதிநிதிகளிடம் குறைகள் கேட்டார்.

பின்னர் இறுதியாக நேற்று ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். அப்போது மறுகுடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாக அவர் ராஜபக்சேவிடம் தெரிவித்தார்.

தமிழர்களை வேலை வாங்குங்கள்:

இதுகுறித்து இலங்கை தரப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய அரசு இலங்கைக்கு செய்துள்ள உதவிகள் குறித்து அதிபர் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்தார். மேலும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய அரசு மேற்கொள்ளும் திட்டப் பணிகளில் தமிழர்களையும் ஈடுபடுத்தலாம். இதன் மூலம் அவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.

அதிபர் ராஜபக்சேவிடம் நிரூபமா கூறுகையில், மறு சீரமைப்பு, மறுகுடியேற்றம் தொடர்பான இலங்கை அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் ராஜபக்சே பேசுகையில், இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள்,இலங்கையில் தொழில் முதலீடுகளைச் செய்ய ஆர்வமாக உள்ளனர் என்று தெரிவித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் வீடுகளை இந்திய அரசு கட்டித் தரவுள்ளது. இப்பணிகளுக்காக இந்தியாவிலிருந்து 20 ஆயிரம் பேரை வேலை செய்யக் கூட்டி வர இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சீனா தனது திட்டங்களுக்காக சீனாவிலிருந்து கைதிகளை பெருமளவில் கொண்டு வந்து குவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்தவரிசையில் இந்தியாவும் இந்தியர்களைக் கூட்டி வந்து இலங்கையில் பணியில் அமர்த்தப் போவதாக கூறப்படுகிறது.

ஆனால் இதை நிரூபமா மறுத்துள்ளார். இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி. அப்படி ஒரு திட்டம் இந்தியாவிடம் இல்லை. ஒரு வேளை தேவைப்பட்டால் அது குறித்து பரிசீலிப்போம் என்றார்.

இதற்கிடையே பிபிசிக்கு நிரூபமா ராவ் அளித்த பேட்டியில், கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இந்தியா சார்பில் 10 ஆயிரம் வீடுகள் தமிழர்களுக்காக கட்டித் தரப்படும். இதில் இடம் பெயர்ந்தோருக்காக 1500 வீடுகள் கட்டித் தரப்படும். இந்த மாகாணத்தில், இந்தியா சார்பில் 500 மெகாவாட் மின் நிலையம் அமைத்துத் தரப்படும் என்றார்.

இந்தியா கட்டித் தரவுள்ள இந்த மின் நிலையம் சம்பூர் பகுதியில் வரவுள்ளது. இதற்காக இப்பகுதியை விட்டு தமிழர்களை விரட்டி விட்டு விட்டனர். அப்பகுதி முழுவதும் உயர் பாதுகாப்பு வளையமாக இலங்கை அரசு மாற்றி ராணுவத்தை குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கிழக்கு மாகாண முதல்வரான பிள்ளையான் என்கிற சந்திரகாந்தனையும் நிரூபமா ராவ் சந்தித்துப் பேசினார்.

இருப்பினும் தமிழர்களின் முக்கியப் பிரதிநிதியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நிரூபமா ராவ் பேச்சுவார்த்தை எதையும் மேற்கொள்ளவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X