சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி தேவையில்லை: டாக்டர் கிருஷ்ணசாமி
இது குறித்து கோவையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வெற்றியடைய வியூகம் வகுக்க புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறும் இடம், தேதி பின்பு முறைப்படி அறிவிக்கப்படும்.
கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக மேல் சபை கொண்டு வரப்பட உள்ளது. மேல் சபையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவின் குமார் அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
மேல் சபையில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும். இடஒதுக்கீடு வழங்காமல் மேல் சபையை நடத்த விடமாட்டோம்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு சென்றுள்ளதால் எந்த பயனும் இல்லை. மாறாக போர் குற்றத்தில் இருந்து ராஜபக்சே தப்பிக்கவே இந்த பயணம் உதவும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு எத்தனை தொகுதி என்பதை தேர்தல் தேதி அறிவித்த பின்பு முடிவு செய்வோம்.
தமிழகத்தில் தி.மு.க. அல்லாத அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டும். எனவே மூன்றாவது அணி தேவையில்லாத ஒன்று என்றாரி அவர்.