காமன்வெல்த் போட்டியைக் கலக்க வருகிறது ஆப்பிரிக்காவின் வுவுஸேலா இசைக் கருவி
டெல்லி: ஆப்பிரிக்காவின் நூதன இசைக் கருவியான வுவுஸேலா டெல்லி காமன்வெல்த் போட்டியின்போதும் ரசிகர்களால் இசைக்கப்படவுள்ளது.வவுஸேலாவைக் கண்டால் மேற்கத்திய நாட்டினருக்கு அலர்ஜியாக இருக்கலாம். ஆனால் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின்போது போட்டிகளை விட அதிகம் கவர்ந்தது இந்த வுவுஸேலாதான். இப்போது டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியின்போதும் இந்த இசைக் கருவி இந்திய ரசிகர்களை சிலிர்க்க வைக்க வருகிறது.
நீளமான பிளாஸ்டிக்காலான வாத்தியம்தான் இந்த வுவுஸேலா. காதைக் கிழிக்கும் சப்தத்தை கொடுப்பதாகும். ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான இசைக் கருவி இது.
உலகின் முக்கியப் போட்டிகளில் இந்த கருவி இப்போது பிரபலமாகி வருகிறது. உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிக்குப் பிறகுதான் இது பெரும் பிரபலமானது.
அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறவுள்ள டெல்லி காமன்வெல்த் போட்டியின்போது இந்த இசைக் கருவியை அறிமுகம் செய்யவுள்ளனர். இருப்பினும் இந்தக் கருவியை ஸ்டேடியங்களுக்குள் கொண்டு செல்ல இதுவரை போலீஸ் தரப்பிலிருந்து அனுமதி தரப்படவில்லையாம். ஆனால் அனுமதி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
வுவுஸேலாவின் சத்தம், மேற்கத்தியர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கலாம். ஆனால் இந்தியர்களுக்கு அப்படி இருக்காது என நம்பலாம். ஏனென்றால் நம்மவர்கள் போடும் சவுண்டு இதை விட பல மடங்கு டெசிபல் அதிகம் என்பதால்!