சோனியா தலைமையில்தான் காங். சிறப்பாக செயல்படுகிறது-கருணாநிதி
காங்கிரஸ் தலைவராக 4வது முறையாக தேர்வாகிறார் சோனியா காந்தி. இதையடுத்து சோனியாவுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதம்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 4-வது முறையாக, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம், காங்கிரஸ் கட்சித் தேர்தலில் தாங்கள் ஒரு வரலாற்றை நிகழ்த்தியிருக்கிறீர்கள். சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி முன்னின்று போராடியதையும், ஈடுசெய்யமுடியாத பல்வேறு தியாகங்களையும் செய்துள்ளதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
தங்களது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி மிக சிறப்பான வகையில் செயல்பட்டு வருகிறது. மக்களிடையே அதன் மதிப்பு மேன்மேலும் உயர்ந்து வருகிறது.
தேசத்தின் ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் பாடுபடுவதற்கும், ஏழைகளின் நலனுக்காக பாடுபடுவதற்கும் ஒரு உகந்த கருவியாக காங்கிரஸ் கட்சியை ஆக்கியிருக்கிறீர்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழக மக்களின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்காக மீண்டும் ஒருமுறை வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
1998 முதல் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார் சோனியா காந்தி. 125 ஆண்டு கால காங்கிரஸ் வரலாற்றில் அந்த பதவியில் இவ்வளவு அதிக காலம் இருப்பவர் சோனியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.