சென்னையில் மீண்டும் மழை-இன்று இரவும் பெய்யும்
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர தமிழகத்தில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இன்று இரவு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்க கடலில் ஆந்திரா அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டின் கடலோர பகுதி மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. சென்னையில் நேற்று மாலையில் திடீரென மேகமூட்டங்கள் உருவானதால் இரவில் திடீரென பலத்த மழை பெய்தது. இடி- மின்னலுடன் விடிய விடிய மழை நீடித்தது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பலத்த மழை நீடித்ததால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
இன்றும் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பல இடங்களில் நல்ல மழையும், சில இடங்களில் லேசான மழையும் காணப்பட்டது. இதுகுறித்து வானிலை மையம் தெரிவிக்கையில், இன்று இரவும் நல்ல மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றனர்.