ரேஷன் அரிசி கடத்துபவர்களை பிடிக்க பெண் போலீஸ் படை
சென்னை: தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்துபவர்களைப் பிடிக்க பெண் போலீஸ் படை அமைக்கப்படுகிறது.
தமிழக மக்களுக்காக முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்திய ரூ. 1 அரிசி அதிக அளவில் அன்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பொதுவிநியோகக் கடைகளில் விற்கவேண்டிய அரிசி மொத்தமாக கடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இந்தக் கடத்தல் மிகப் பெரிய தொழிலாகவே நடந்து வருகிறது. இருப்பினும் இதுவரை இதைத் தடுக்க அரசுத் தரப்பில் ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் இல்லை.
இத்தனை நாள் லாரி மூலமாக நடந்த இந்த அரிசி கடத்தல் தற்போது மின்சார ரயில் மூலமாக நடக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மின்சார ரயில் மார்க்கமாக ஆந்திராவிற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 80,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுகின்றது.
இந்த துணிகர கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆண்கள் அல்ல பெண்கள். இதற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் கூலி ரூ. 200. இவர்களைப் பிடிக்க ஆண் போலீசார் சிரமப்படுகின்றனர்.
அரிசி கடத்தும் பெண்கள் மிகத் தெளிவாகப் பெண்கள் வகுப்பு பெட்டியில் தான் பயணம் செய்கின்றனர். அதற்குள் ஏறி ஆண் போலீசாரால் சோதனை போட முடியாததால் 40 பேர் கொண்ட பெண் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படை சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து மக்களுடன் மக்களாகக் கலந்து சோதனை போடுவார்கள். மேலும், கணிகாணிக்கவும் செய்வார்கள். இதற்காக போலீஸ் படை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
பகல் நேரத்தை விட இரவில் தான் அரிசி கடத்த உகந்தது என்று கடத்தல்காரர்கள் நினைக்கின்றனர். அதனால் இரவில் அரிசி கடத்தல் அதிக அளவில் நடக்கிறது.
அரிசி கடத்தும் பெண்கள் வெறும் கருவிகள் தான். இவர்களை ஆட்டிப் படைப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.