விதிமுறையை மீறும் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு 3 மணி நேரம் டிராபிக் போலீஸ் பணி
காஞ்சிபுரம்: கூடுதலாக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு காஞ்சிபுரம் போலீஸார் நூதன தண்டனை தருகின்றனர். அவர்களை 3 மணி நேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தச் சொல்கின்றனர்.
ஆட்களை மூச்சு முட்டும் அளவிற்கு ஏற்றி செல்வது தான் ஷேர் ஆட்டோக்கள். இவ்வாறு பயணிகளை பொட்டலங்கள் போல அடைத்துக் கொண்டு செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை எவ்வவாறு தடுப்பது என்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்வு காணுமாறு காஞ்சீபுரம் போலீஸ் எஸ்.பி. பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். என்ன தான் அளவிற்கு அதிகமாக ஆட்களை ஏற்றும் ஷேர் ஆட்டோக்களை பிடித்து தண்டித்தாலும் மீண்டும் தங்கள் வேலையைத் தான் காட்டுகிறார்கள். எனமே, நாமும் சற்று வித்தியாசமாக யோசித்துத் தான் தண்டனை வழங்க வேண்டும் என்று அதில் முடிவு செய்தனர்.
காஞ்சீபுரம் நகரின் பல பகுதிகளில் இனி பிடிக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு செய்வதைத் தவிர்த்து ஆட்டோ ஓட்டுநர்கள் 3 மணி நேரம் நடுரோட்டில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தினர். அதன்படி அளவிற்கு மீறி ஆட்களை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோக்களை சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி பிடித்தார்.
அந்த ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசாரின் மேலாடையைக் கொடுத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உத்தரவிட்டார். தன் சக ஆட்டோ ஓட்டுநர்கள் பட்டபாடைக் கண்கூடாகப் பார்த்த மற்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த புதிய தண்டனையை ஏற்றுக் கொள்வதை விட விதிமுறையை பின்பற்றுவது நல்லது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் குறைந்துள்ளது என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து மற்ற வாகன ஓட்டிகள் கூறியதாவது,
முன்பெல்லாம் ஷேர் ஆட்டோக்கள் விதிமுறையின்றி அவர்கள் இஷ்டம் போல் ஓட்டினார்கள். தற்போது அந்த தொல்லையின்றி நாங்கள் நிம்மதியாகச் செல்கிறோம். இந்த வித்தியாசமான தண்டனையை சென்னையிலும் கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றனர்.