பெட்ரோல் விலை மீண்டும் லிட்டருக்கு ரூ. 1.10 உயரலாம்!
பெட்ரோல், டீசல் விலை மீது இருந்த விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டது. இப்போது சர்வேதச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டிக் குறைத்து விற்று வருகின்றன.
இந் நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அதிக கமிஷன் கோருவதால், அதனால் ஏற்படும் கூடுதல் செலவையும் பொது மக்கள் தலையிலேயே கட்டிவிட எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரவுள்ளது.
இந்தியா முழுவதும் 38,700 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வரும் இந்த பங்க்குகளுக்கு விற்பனை விலையில் ஒரு பகுதியை எண்ணெய் நிறுவனங்கள் கமிஷனான வழங்குகின்றன.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.08ம், ஒரு லிட்டர் டீசலுக்கு 67 பைசாவும் கமிஷனாக வழங்கப்படுகிறது. இந்தக் கமிஷன் போதாது என்று பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
பங்க் பராமரிப்பு செலவு, ஊழியர்களுக்கான சம்பளம், மின் கட்டணம் போன்றவை அதிகமாகிவிட்டதால் 5 சதவீதம் கமிஷன் தொகையாக வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.
இதை ஏற்காவிட்டால் வரும் 20ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவை, தாங்கள் ஏற்காமல் அதை பொது மக்கள் மீதே சுமத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஒருமுறை உயர்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
பங்க் உரிமையாளர்கள் கேட்பது போல 5 சதவீதம் கமிஷன் தரப்பட்டால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.10ம், டீசல் விலை லிட்டருக்கு 60 பைசாவும் உயரும் என்று கூறப்படுகிறது.
இதனால் கமிஷனை கொஞ்சம் மட்டும் உயர்த்தி விலையையும் கொஞ்சமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
சமையல் கேயாஸ் விற்பனை செய்யும் டீலர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் 8 சதவீதம் கமிஷன் தருகினறன என்பது குறிப்பிடத்தக்கது.