'ராகுல் பிளான்': விஜய்காந்துடன் பேச்சு நடத்தும் காங்கிரஸ்!
கூட்டணியே அமைக்க மாட்டேன், மக்களுடன் தான் கூட்டணி, கூட்டணி அமைத்துப் போட்டுயிடுவோரெல்லாம் கேவலமானவர்கள் என்றெல்லாம் பேசி வந்த விஜய்காந்த், கடந்த மக்களவைத் தேர்தலில் அனைத்து இடங்களில் டெபாசிட் இழந்ததையடுத்து கூட்டணி்க்குத் தயார் என்றார்.
இந் நிலையில் அதிமுக தரப்புடனும் விஜய்காந்த் சார்பில் சிலர் பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வருகின்றன. இதை தேமுதிக மறுக்கவி்ல்லை.
இந் நிலையில் என்னை முதல்வராக ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி என்று விஜய்காந்த் திடீரென அறிவித்தார். மேலும் நேற்று சிவகாசியில் பொதுக் கூட்டத்தில் பேசிய விஜய்காந்த், 30, 40 சீட்டுக்காகவெல்லாம் கூட்டணி அமைக்க மாட்டேன் என்றார்.
இதனால் அதிமுக இவருக்கு 40 சீட் மட்டுமே தர முன் வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையே விஜய்காந்த்துடன் காங்கிரஸ் தரப்பும் பேச்சு நடத்தி வருகிறது. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரான யுவராஜா சில நாட்களுக்கு முன் விஜய்காந்தை சந்தித்து நெடு நேரம் பேச்சு நடத்தியுள்ளார். ராகுல் காந்தியின் உத்தரவின் பேரிலேயே அவர் விஜய்காந்தை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் அதிக இடங்களைப் பெறவே விஜய்காந்த்தை பயன்படுத்தி காங்கிரஸ் மறைமுக மிரட்டல் விடுகிறது என்கிறார்கள். அதிக சீட் தராவிட்டால் விஜய்காந்துடன் சேரவும் தயங்க மாட்டோம் என்பது தான் ராகுல் காந்தியின் இந்த செயல்களுக்கு அர்த்தம் என்கிறார்கள்.
இதனால் திமுக பணிந்து, அதிக சீட்களைத் தந்து கூட்டணியைத் தொடர்ந்தாலும், வரும் சட்டமன்றத் தேர்தலோடு திமுக உறவை வெட்டிக் கொண்டு, தேமுதிகவுடன் கைகோர்க்க ராகுல் முடிவு செய்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இந் நிலையில் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஈரோட்டில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில்,
தேமுதிக தொடங்கப்பட்டு 5 வருடம் ஆகிறது. கட்சிக்கு மக்களின் ஆதரவு பெருகி உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது என்று இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்
இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தியாக தேமுதிக விளங்கும் என்றார்.
இதன்மூலம் ஆட்சியைப் பிடிக்க அடுத்த தேர்தல் தனது டார்கெட் இல்லை என்பதை தேமுதிக தெரிவித்துள்ளது.
தேமுதிகவின் இப்தார் விருந்து:
இந் நிலையில் வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதி தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழச்சி நாளை மறுநாள் மாலை நடக்கிறது. இதில் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்.