சூடான் அகதிகள் முகாமில் நடந்த கலவரத்தில் 43 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் காயம்
கெய்ரோ: ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் நேற்றிரவு வெடித்த கலவரத்தில் 43 பேர் உயிர் இழந்தனர், 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
கடந்த 2003-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள தார்பரில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இதில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரைத் வெறித்தனமாகத் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக இறந்தனர். ஏராளமான வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டும், தீ வைத்து எரிக்கப்பட்டும் சேதமடைந்தன. இதனால் 27 லட்சம் பேர் இருக்க இடமின்றித் தவித்தனர்.
ஒதுங்க இடமின்றி தெருவில் நின்றவர்களுக்காக சூடானின் மேற்கு பகுதிகளில் பல அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டன. அதில் பல லட்சம் பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அகதிகள் முகாம்களில் இருப்பவர்களுக்கு இடையில் அடிக்கடி தகராறு நடப்பது வழக்கமாகி விட்டது. இதனால் தாக்குதல் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று மேற்கு தார்பரில் உள்ள ஹமிதியா முகாமில் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது. இதில் இரு பிரிவினரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். விடிய விடிய நடந்த இந்த கலவரத்தில் சுமார் 43 பேர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து சூடான் நாட்டு ராணுவம் வரவழைக்கப்பட்டு கலவரத்தை அடக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.