ராஜராஜன், மனைவி லோகமாதேவியின் சிலைகளை ஒப்படையுங்கள்-மோடிக்கு தமிழக அரசு கோரிக்கை
அகமதாபாத் : குஜராத் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவியின் செப்புச் சிலைகளை தமிழகத்திற்குத் தர வேண்டும் என்று கோரி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழக குழு வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு, தொல்பொருள் ஆய்வாளர்கள் நாகசாமி, நடனகாசிநாதன், குடவாயில் பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய குழுவினர் அகமதாபாத் சென்று மோடியைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது மோடியிடம் ராஜ ராஜசோழனின் சிறப்புகளை விவரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பெரிய கோவிலை அவர் கட்டிய விதம் உள்ளிட்டவற்றை விவரித்தார். மேலும், தஞ்சைப் பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா தஞ்சையில் செப்டம்பர் 25,26 ஆகிய தேதிகளில் நடைபெறவிருப்பதாகவும் தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி மோடிக்குத் தெரிவித்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
பின்னர் அகமதாபாத்தில் உள்ள காலிகோ மியூசியத்தில், ராஜராஜ சோழன், அவரது மனைவி லோகமாதேவி ஆகியோரின் அரிய செப்புச் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதை தெரிவித்த தங்கம் தென்னரசு, அவற்றை தமிழக அரசிடம் வழங்க நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக ஏற்கனவே முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளதையும் சுட்டிக் காட்டினார் தங்கம் தென்னரசு.
கடந்த 1940ம் ஆண்டுகளில் இந்த இரு சிலைகளையும் அகமதாபாத்தைச் சேர்ந்த சாராபாய் பவுண்டேஷனை நிறுவியவரான கெளதம் சாராபாய் பெற்றார். அதன் பின்னர் தனது காலிகோ மியூசியத்தில் இரு சிலைகளையும் வைத்தார்.
இந்த இரு சிலைகளும் செப்பால் ஆனவையாகும். தஞ்சைப் பெரிய கோவிலை கட்டிய பெருந்தச்சன், ராஜராஜனுக்கு சிறப்பு செய்யும் வகையில் இந்த தத்ரூபமான சிலையை வடித்தார். கூடவே மகாராணி லோகமாதேவியின் சிலையையும் அவர் வடித்து ராஜராஜ சோழனிடம் கொடுத்தார் என்பது வரலாறு.