கேரளாவில் கள் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது: 6 பேர் தமிழர்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் விஷக் கள் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தமிழர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் குற்றிபுரம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 பேர் இறந்து கிடந்தனர். மேலும் 3 பேர் மயங்கிய நிலையில் இருந்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள குற்றிபுரம் மற்றும் வண்டூர் கள்ளுக் கடையில் மீத்தேன் ஆல்கஹால் அதிகளவு கலக்கப்பட்ட கள் குடித்தது தெரிய வந்தது.
அதுபற்றி மேலும் விசாரித்தபோது வெள்ளிக்கிழமை இரவே அந்த பகுதியில் பலர் பலியாகி இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் கள் குடித்தது தான் அவர்கள் சாவுக்கு காரணம் என்பது தெரியாமல் இருந்தது. ரயில் நிலையத்தில் மயங்கிக் கிடந்தவர்களை பரிசோதித்தபோது தான் உண்மை அம்பலமானது.
இந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் இதுவரை கள் குடித்த 23 பேர் இறந்துள்ளனர். மேலும் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நீதி, தனசேகரன், வேலூரைச் சேர்ந்த சின்னசாமி, தி்ண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ரவிசந்திரன் ஆகியோர் அடையாளம் தெரிந்துள்ளது. மற்றொருவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை.
கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த முதல்வர் அச்சுனாந்தன் உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கள்ளுக் கடை உரி்மையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.