இஸ்ரோவின் புதிய திரவ ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி!
நெல்லை: மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவி்ன் ராக்கெட் சோதனை மையத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கான திரவ என்ஜினின் இறுதி கட்ட சோதனை பெரும் வெற்றி பெற்றுள்ளது.நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரி மலைப் பகுதியில் உள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ராக்கெட் சோதனை மையம்.
இந்திய ராக்கெட்டுகளுக்கு உந்து சக்தி தரும் திட, திரவ எரிபொருள்கள் இங்கு தான் சோதனையிடப்படுகின்றன.
அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு பயன்படும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களை செலுத்த எடை குறைந்த திரவ என்ஜின்கள் பயன்படுகின்றன.
இதுவரை வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான என்ஜின்களையே இந்தியா பயன்படுத்தி வருகிறது. இப்போது உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் இந்த என்ஜின்களை இஸ்ரோ உருவாக்கி வருகிறது.
தகவல் தொடர்புக்கு உதவும் ஜி-சாட் 4 செயற்கைகோளை, ஜி.எஸ்.எல்.வி. மார்க்- 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த முயற்சி நடக்கிறது.
இதில் பயன்படுத்தப்படும் எல்110 டி2 திரவ என்ஜினின் சோதனை, கடந்த மார்ச் 5ம் தேதி மகேந்திரகிரி மையத்தில் நடந்தது.
ஆனால், அப்போது 200 வினாடிகளுக்கு இயங்க திட்டமிடப்பட்ட என்ஜின் 150 வினாடிகள் மட்டுமே இயங்கியது. இதனை வெற்றி என அப்போது அதிகாரிகள் கூறினாலும் மீண்டும் 200 வினாடிகளுக்கு என்ஜினை இயக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கான பணிகள் கடந்த 5 மாதங்களாக இரவு பகலாக நடந்தன.
நேற்று மாலை 3.50 மணிக்கு மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் என்ஜின் 200 வினாடிகள் இயங்கி முழுமையான வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுவரை, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளின் தொழில்நுட்பத்துடன் கூடிய என்ஜின்களை தனது ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளில் பயன்படுத்தி வந்த இந்தியா, இனிமேல் தானே உருவாக்கிய என்ஜினால் ஆன ராக்கெட்டுகளை பயன்படுத்த முடியும்.