பாமக இளம்பெண்கள், இளைஞர்களுக்கு அரசியல் பாடம்-ராமதாஸ் போதனை
விழுப்புரம்: தமிழகத்தில் அதிகளவு அரசியல் கட்சிகள் உள்ளன. கட்சி பெயர் தெரியும், ஆனால் உங்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியாது.
விலைவாசிக்கு உயர்வுக்குக் காரணம் ஆளும் அரசு தான் காரணம் என்பது தான் அரசியல். அரசு தான் விலைவாசியை குறைக்க வேண்டும். இந்த விவரம் தெரிவது தான் அரசியல் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பாமக இளம் பெண்கள், இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
தமிழகத்தில் அதிகளவு அரசியல் கட்சிகள் உள்ளன. கட்சி பெயர் தெரியும், ஆனால் உங்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியாது. உதாரணமாக 40 ரூபாய்க்கு விற்ற பருப்பு 100 ரூபாய்க்கு விற்கிறது. எண்ணெய், அரிசி விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது. நீங்கள் வாங்குகிறீர்கள். விலைவாசிக்கு காரணம் ஆளும் அரசு தான் காரணம் என்பது தான் அரசியல். அரசு தான் விலைவாசியை குறைக்க வேண்டும். இந்த விவரம் தெரிவது தான் அரசியல்.
டாஸ்மாக் விற்பனையால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கும் அரசு தான் காரணம். உங்க ஊருக்கு ரயில்வே அமைச்சர் வேலு ரயில் விடுகிறார். ஓட்டுக்கு 1,000 ரூபாய் வாங்கிக் கொண்டு அவரை தோற்கடித்தனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது என சொல்லுங்கள். அது மக்களுக்கு ஒதுக்கப்படும் பல பணிகளுக்கான பணம். அதில் கொள்ளையடித்து, கோடி கோடியாக சேர்த்துக் கொண்ட பணம். அள்ளிக் கொண்ட பணத்தை மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கிள்ளிக் கொடுக்கின்றனர்.
இந்த தேர்தலுக்குள், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரு சொட்டு சாராயம் இல்லாமல் மூட வேண்டும். அப்படி மூடவில்லை என்றால் ஒரு லட்சம், இரண்டு லட்சம் பெண்களைத் திரட்டி, சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளோம். தேர்தலுக்குள் ஒவ்வொரு டாஸ்மாக் கடையையும் அடித்து நொறுக்குவோம். தமிழகத்தில் இளம் பெண்கள் தாலி அறுப்பது அதிகம், இதற்குக் காரணம் குடிப்பழக்கம் அதிகமாவது தான் என்றார் ராமதாஸ்.
அன்புமணி ராமதாஸும் நிகழ்ச்சியில் பேசினார்.