மதுரை விமான நிலைய புதிய முனையம்-ப.சிதம்பரம் திறந்து வைத்தார்
மதுரை: மதுரை விமான நிலையத்தில் ரூ. 128 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை இன்றுமத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோரது முன்னிலையில் ப.சிதம்பரம் புதிய முனையத்தைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரபுல் படேல், மதுரை விமான நிலையம் சர்வதேச அந்தஸ்து பெறும். அங்கு சர்வதேச விமானங்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஒரே நேரத்தில் 7 விமானங்களை நிறுத்தவும், 500 பயணிகளை கையாளவும் ஏற்ற நவீன வசதிகளுடன், புதிய ஒருங்கிணைந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
17,500 சதுர மீட்டரில், 128 கோடி ரூபாய் செலவில், உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று ஏரோ பிரிட்ஜ் இணைப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இதன்மூலம் விமான நிலைய கட்டடத்தில் இருந்து, நேரடியாக விமானத்திற்கு செல்ல முடியும். ஏற்கனவே மதுரை விமானநிலையத்தில் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். புதிய முனையம் திறக்கப்பட்டதும் ஏழு விமானங்களை நிறுத்தலாம்.
சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, மின்சாரத்தை சேமிக்கும் பசுமை கட்டடமாக புதிய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆறு "எஸ்கலேட்டர்', ஆறு "லிப்டு'கள் உள்ளன. வெளிநாட்டு பயணங்களுக்கான எமிகிரேஷன், கஸ்டம்ஸ் பணிகளுக்கு தனியிடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை சோதனை செய்வதற்கான (செக் இன்) ஒரே இடத்தில் அமைக்கப்படுகிறது. புறப்படும் 250 பயணிகள், வந்துசேரும் 250 பயணிகள் என 500 பேரை ஒரே நேரத்தில் கையாளுவதற்கான வசதி உருவாக்கப்பட்டுள்ளது.