கடந்த தேர்தலை விட அதிக திட்டங்கள் அறிவிக்கப்படும்-அன்பழகன்
புதுக்கோட்டையில் நடந்த திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,
பெரியாரின் தொண்டால்தான் ஆட்சிக்கு வர முடிந்தது என்பதை நாங்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறோம். தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி திமுகதான் என்பதை மக்கள் உணர வேண்டும்.
இலவசத் திட்டங்கள் மக்களை வசப்படுத்த அல்ல, அவர்களை வளமாக்கத்தான். பசியையும் வறுமையையும் விரட்டுவதுதான் மனித குலத்தின் முதல் தர்மம். எனவே, இலவசமாகக் கொடுப்பது பாவமல்ல. இலவசத்தால்தான் சமுதாயத்தில் மெல்ல சமத்துவம் மலரும். இதுவரை வரலாறு காணாத வகையில் இலவசத் திட்டங்களை அளித்து வருவதால் முதல்வர் கருணாநிதியின் கை ஓங்கியிருக்கிறது. தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல இலவசத் திட்டங்கள் நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில், திமுகவின் ஆட்சிக்கு முடிவு வராதா என்ற ஏக்கத்தில் சில பத்திரிகைகள் அவரவர் எண்ணத்துக்கேற்ப செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
புதிதாக அறிவிக்கப்பட்ட வீடு வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற அடுத்த 6 ஆண்டுகள் பிடிக்கும் என்கிறபோது, அடுத்ததாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இதை எப்படி நிறைவேற்ற முடியும் என யாரும் பயப்படத் தேவையில்லை.
இந்த ஆட்சியை மாற்றி வேறு யாரும் வரமாட்டார்கள் என உறுதிபடக் கூறுகிறார் கருணாநிதி. சாதாரணமாக அவர் அப்படி ஓர் உறுதியைக் கொடுக்கமாட்டார்.
இதில் அவருக்குச்சந்தேகம் வந்திருந்தால், நாங்கள் போராடுவோம், நீங்கள் ஆதரவளித்தால் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றல்லவா கூறியிருப்பார்? இந்த அளவுக்கு ஒரு முதல்வர் பேசுவதைப் பார்த்த பிறகும் அதை ஒப்புக்கொள்ளாமல், அதை எடுத்துக் கூறாமல், திமுகவின் வலிமை, ஆற்றல் வெளியே தெரிந்துவிடக்கூடாது, அதை மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
அந்தச் செய்தியில், பல முரண்பட்ட விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. தோ்தல் கூட்டணி குறித்து இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுகவுக்கு கூட்டணி குறித்து அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஆளும் கட்சியின் புதிய எழுச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எழுதுகின்றனர். தமிழனுக்கு சொரணை இல்லாத காரணத்தால்தான் இவையெல்லாம் வருகின்றன. இதன் பின்னணி என்ன என்பது எங்களுக்குத் தெரியும்
கடந்த தேர்தலில் அறிவித்த திட்டங்களை விட வரும் தேர்தலில் அதிகமான திட்டங்களை கருணாநிதி அறிவிக்கவுள்ளார். மக்கள் நலனை மட்டுமே அவர் கவனத்தில் கொண்டுள்ளதால் தான், பல திட்டங்களை அவரால் செயல்படுத்த முடிகிறது.
இதை பார்த்து தான், இதர கட்சிகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் கூட திமுக,வில் இணைந்து வருகின்றனர். இவ்வாறு வருகின்றவர்களை இருகரம் கூப்பி நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு என்ன காரணம் என்றால், திமுக என்பது கட்சிக்காரர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. தமிழ் இனத்தைக் காப்பாற்றுகின்ற கட்சி.
அதிமுகவினர் திமுகவில் இணைவதால் தான் ஜெயலலிதா, கருணாநிதியைப் பார்த்து திருக்குவளை தந்த தீயசக்தி என்றும், அதை அழிக்க வேண்டும் என்ம் கொக்கரிக்கிறார். அவரை ஜெயலலிதா மட்டுமல்ல... எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. திருக்குவளை தந்த சக்தி என்பது தீயசக்தி அல்ல; "தீ'' சக்தி. இந்த சக்தி, அழிய வேண்டியவர்களை அழிக்கும்; எரிய வேண்டியவர்களை எரிக்கும் என்றார் அன்பழகன்.