தொப்பூர் காட்டில் ரூ 40 லட்சம் தந்தங்கள் பறிமுதல்... முன்னாள் ராணுவ வீரர் கைது!
தர்மபுரி: தர்மபுரி அருகே உள்ள தொப்பூர் காட்டில் ரூ 40 லட்சம் மதிப்புள்ள யானைத் தந்தங்களை அதிரடிப் படையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
தருமபுரி அருகேஉள்ள ஒகேனக்கல்லில் அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் ஒரு பிரிவினர் தொப்பூர் காட்டுப்பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது 3 பேர் தலையில் மூட்டையை தூக்கி கொண்டு வந்துள்ளனர். அவர்கள் அதிரடிப்படை போலீசாரைப் பார்த்ததும் மூட்டையைப் போட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது அதிரடிப்படை போலீசார் அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றனர்.
அவர்களில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் விசாரித்த போது அவர் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மறுகாலம்பட்டியைச் சேர்ந்த குப்புசாமி (48) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் முன்னால் ராணுவ வீரர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் வீசிச் சென்ற மூட்டையைப் பிரித்துப் பார்த்த போது அதில் 23 கிலோ யானைத் தந்தம் இருந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ. 40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் வனத் துறையினரிடம் அந்த தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டன. மேலும் குப்புசாமியை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
பிடிபட்ட தந்தங்களை ஹைதராபத்தில் உள்ள ஆய்வகத்துக்கு சோதனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.