10 லட்சம் தொழிலாளர்களை நீக்கும் க்யூபா!
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக க்யூபா இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து க்யூபா தொழிலாளர் யூனியன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 6 மாதங்களுக்குள் 5 லட்சம் தொழிலாளர்களை பணியிலிருந்து விலக்குவதென்றும், அதற்கடுத்த 6 மாதங்களில் மீதமுள்ள 5 லட்சம் பேரை நீக்கப் போவதாகவும் கூறியுள்ளது.
இதன் மூலம் க்யூபாவின் பொருளாதா நெருக்கடியை ஓரளவு குறைக்க முடியும் என நம்புவதாக அரசு தெரிவித்துள்ளது.
பணியிழந்த தொழிலாளர்களுக்கு சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ நாடான க்யூபாவில் 100 சதவிகித கல்வியறிவும் மருத்துவ வசதிகளும் மக்களுக்கு அளிக்கப்படுகின்றன. நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலவச கல்வியுடன் முழுமையான மருத்துவ வசதியும் அளிக்கப்படுகிறது. இது தவிர, மிகக் குறைந்த விலையில் வீடு, இலவச போக்குவரத்து வசதியும் அளித்து மாதம் ரூ 1000 ஊதியமும் வழங்குகிறது.
அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் விதித்துள்ள பல்வேறு பொருளாதாரத் தடைகளுக்கு முகம் கொடுத்தவண்ணம் தனது மக்களுக்கு அனைத்து வசதிகளையும் க்யூபா அளித்து வந்தது.
இப்போது நாட்டில் சிறு அளவிலான தனியார் வர்த்தகத்தை ஊக்குவிக்கவும், சீனாவில் உள்ளதைப்போன்ற சந்தைப் பொருளாதாரம் இணைந்த கம்யூனிஸ அமைப்பைக் கொண்டு வரவும் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ முடிவு செய்துள்ளார். அதன் விளைவுதான் இந்த 10 லட்சம் தொழிலாளர்களின் நீக்கம். இவர்கள் அனைவருக்குமே குறிப்பிட்ட அளவில் நிதி அளித்து வர்த்தகர்களாகவும், நிலங்களை அளித்து தனி விவசாயிகளாகவும் மாற்ற முடிவு செய்துள்ளது.
1959-ல் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஹவானாவில் நிகழ்ந்த மாபெரும் க்யூப புரட்சிக்குப் பிந்தைய முதல் பெரிய பொருளாதார மாற்றம் இந்த தனியார்மயமாக்கல் என சர்வதேசம் வர்ணித்துள்ளது.
அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் இந்த மாறுதல்களுக்கு, முன்னாள் அதிபரும் க்யூப தந்தை என வர்ணிக்கப்படுபவருமான பிடல் காஸ்ட்ரோவும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.