பாளை சிறைக்குள் கைதி அடித்து கொலை-பிரேத பரிசோதனையில் அம்பலம்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
பாளை மத்திய சிறையி்ல் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த கைதி ஒருவரின் செல் காணாமல் போனது தொடர்பாக இரு தரப்பு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வல்லநாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை சில கைதிகள் தாக்கியதில் அவர் இறந்தார்.
இது குறித்து சிறைத் துறை அதிகாரி கூறும்போது சுப்பிரமணியன் இருதய நோயால் இறந்தார் என்று கூறினார்.
ஆனால் சுப்பிரமணியன் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவர் பேரவை அமைப்பின் தலைவர் மணி தலைமையில் அவரது உறவினர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
இந்நிலையில் நெல்லை நீதிபதி ராஜேந்திர கண்ணன் நேற்று முன்தினம் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நடந்தது.
மேலும் சிறைத்துறை டி.ஐ.ஜி. கோவிந்தராஜ் நேற்று முன்தினம் மாலை பாளையங்கோட்டைச் சிறைக்கு வந்து விசாரணை நடத்தினார். நேற்றும் விசாரணை தொடர்ந்தது.
இதற்கிடையில் சுப்பிரமணியன் உடல் நெல்லை அரசு மருத்துவமனையி்ல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது மார்பு, இடுப்பு, மர்ம உறுப்பு ஆகிய பகுதிகளில் காயம் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது.
இதையடுத்து அவரை தாக்கிய கைதிகள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.