கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த ஆசிரியை
நெல்லூர்: தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததற்காக 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த ஆசிரியையை கைது செய்துள்ளனர் போலீஸார்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் வெங்கடாச்சலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சைதன்யா. இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கணவர் இறந்து விட்டார். 6 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நாகேஷ் என்பவருக்கும், சைதன்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது. ஆனால் மகள் இடையூறாக இருப்பதாக உணர்ந்தார் சைதன்யா, இதனால் அவள் மீது கோபம் மூண்டது.
இதையடுத்து கடந்த சில நாட்களாக இரும்புக் கம்பியால் சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளார். குழந்தை கதறித் துடித்து அழும்போது டிவி வால்யூமை அதிகரித்து விடுவார். இதனால் அக்கம் பக்கத்தினருக்கு எதுவும் கேட்காது. ஆனால் அடிக்கடி திடீர் திடீரென டிவி சத்தம் அதிகமாக கேட்டதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது சிறுமி உடல் முழுவதும் தீக்காயத்துடன் காணப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், சைதன்யா, தனது குழந்தையை சித்திரவதை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சைதன்யாவை போலீஸார் கைது செய்தனர். கள்ளக்காதலன் நாகேஷும் கைது செய்யப்பட்டார்.