இருவர் தன்னைத் தாக்கியதாக சோராபுதீன் வழக்கின் சாட்சி அஸம் கான் சொன்னது பொய்!
உதய்ப்பூர்: தன்னை இருவர் தாக்கியக் காயப்படுத்தியதாக, சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கின் முக்கிய சாட்சியான அஸம்கான் கூறியது நாடகம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விளம்பரத்திற்காக இவ்வாறு அவர் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தான் தாக்கப்பட்டதாக அஸம்கான் கூறிய இடம் உதய்ப்பூர் உதய் சாகர் ஏரியாகும். அப்போது தன்னுடன் நண்பர் இக்பால் இருந்ததாகவும் அஸம்கான் கூறியிருந்தார்.
ஆனால் அப்படி ஒரு தாக்குதல் நடக்கவே இல்லை என்று இக்பால் கூறியுள்ளாராம். இதுகுறித்து உதய்ப்பூர் எஸ்.பி. சஞ்சீவ் நர்ஸாரி கூறுகையில், உண்மையில் இப்படி ஒரு தாக்குதல் நடக்கவில்லை. ஒருநாட்டுத் துப்பாக்கியை வைத்து தன்னையே தாக்கிக் கொண்டு நாடகமாடியுள்ளார் அஸம்கான்.
இதுதொடர்பாக தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள அஸம்கானிடம் விசாரிக்கவுள்ளோம். ஆனால் தன்னை இரண்டு பேர்தாக்கியதாக தொடர்ந்து கூறி வருகிறார் அஸம்கான்.
ஆனால் விளம்பரம் தேடுவதற்காகவும், மற்றவர்கள் தன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுமே அஸம்கானின் ஒரே நோக்கம் என்று அவருடைய நண்பர் இக்பால் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்க தடயவியல் நிபுணர்களின் உதவியையும் போலீஸார் கோரியுள்ளதாக தெரிவித்தார் நர்ஸாரி.