தீவிர அரசியலில் குதிக்கின்றார் அன்பில் பேரன் மகேஷ் பொய்யாமொழி: திருச்சியில் போட்டியிட முடிவு
திருச்சி: மூத்த திமுக தலைவர் அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும், திருச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மறைந்த அன்பில் பொய்யாமொழியின் மகனுமான மகேஷ் தீவிர அரசியலில் குதிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
திமுக உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் திருச்சி அன்பிலார் என திமுகவினரால் அழைக்கப்படும் அன்பில் தர்மலிங்கம். கருணாநிதியும், அன்பிலும் நெருங்கிய நண்பர்கள். அதேபோல அவரது மகன் அன்பில் பொய்யாமொழியும், ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
அன்பில் பொய்யாமொழி உடல் நலக்குறைவால் மறைந்த பிறகு அவரது மகன் மகேஷுக்கு மு.க. ஸ்டாலினே முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி 1 அல்லது திருச்சி 2 தொகுதியில் போட்டியிட உள்ளதாக அவரது நட்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இது பொய்யாமொழி குடும்பத்திற்கு திமுக தரும் அன்புப் பரிசு என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகின்றது. ஆனால் தீவிர அரசியல், தேர்தலில் நிற்பது குறித்து இதுவரை மகேஷ் மவுனம் காத்து வருவாதாகவே கூறப்படுகின்றது.
சமீபத்தில் திருச்சியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி அன்பில் குடும்பத்தை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். தானும், அன்பிலும் நெருக்கமாக இருந்ததைப் போல, ஸ்டாலினும் பொய்யா மொழியும் நெருக்கமாக இருந்ததைப் போல மகேஷும், ஸ்டாலின் மகன் உதயநிதியும் நெருக்கமாக இருப்பதாக அவர் சிலாகித்துப் பேசியது நினைவிருக்கலாம்.