பொற்கோவிலிலுக்குச் செல்லலாம் ஒபாமா: மகிழ்ச்சியில் சீக்கியர்கள்
அதிபர் ஒபாமா வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்காவில் உள்ள மதம் மற்றும் கல்விக்கான சீக்கிய கவுன்சிலின் தலைவர் ராஜ்வந்த் சிங் கூறியதாவது,
ஒபாமா இந்தியாவிற்குச் செல்லும்போது அமிரதசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் செல்லக் கோரி நாங்கள் கடிதம் எழுதினோம். அவர் அங்கு செல்வார் என்று நம்புகிறோம். இதனால் அமெரிக்க வாழ் சீக்கியர்கள் எதிர்கொள்ளும் பல இன்னல்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
சாதி, மத, இன பேதமின்றி உலக மக்கள் அனைவரும் செல்லும் பொற்கோவிலுக்குச் சென்று அவர் உரையாற்ற வேண்டும் என்ற எங்களின் விருப்பத்தையும் அந்த கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளோம்.
ஒபாமாவின் இந்த பயணத்தால் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும் என்று கருதுகிறோம். அவர் கிழக்கு நாடுகளில் வாழும் மக்களையும், அவர்கள் கலாச்சாரத்தையும் மதிப்பவர்.
சீக்கியர்களை மதித்து அவர்களுக்கு மற்ற சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் அனைத்துச் சலுகைகளையும் அளிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒபாமா அங்கு செல்வதால் அமெரிக்கர்கள் சீக்கியர்களைப் பற்றியும், சீக்கிய மதத்தைப் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் பிறந்தநாளை வெள்ளை மாளிகையில் கொண்டாட அவர் அனுமதி வழங்கியது அவர் சீக்கியர்களின் மீது வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
6 பேர் கொண்ட அமெரிக்க குழு அமிர்தசரஸில் உள்ள கோவில், முக்கிய சாலைகள், சுற்றுலாத் தலங்களை ஆய்வு செய்து வருவதாக அமிர்தசரஸ் துணை கமிஷனர் கே. எஸ். பன்னு தெரிவித்தார்.