விநாயகர் சிலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட எஸ்.ஐக்கு அரிவாள் வெட்டு
சென்னை: சென்னையில் விநாயகர் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அவரை வெடடிவிட்டு தப்பிவிட்டது.
புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றுவர் பகீர் அகமத் (55). இவர் நேற்றிரவு தண்டையார்பேட்டை இருசப்பன் முதல் தெருவில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியி்ல் ஈடுபட்டிருந்தார்.
இரவு 11.30 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் அவரை அரிவாள்களால் வெட்டியது. தப்பியோடிய அவரை அந்தக் கும்பல் விரட்டி விரட்டி வெட்டியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு பொது மக்கள் ஓடி வந்து அந்தக் கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.
தலை, கை, முகம், மணிக்கட்டு என உடலில் 7 இடங்களில் வெட்டு விழுந்து கவலைக்கிடமாகக் கிடந்த அகமதை பொது மக்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதல் நடத்திய கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.