கடைகளுக்கு இனி 5 கிலோ சிலிண்டர்!
வரும் திங்கள் கிழமை முதல் இந்த சிலிண்டர்கள் கிடைக்கும்.
வியாபார நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. 20 கிலோ எடையுள்ள இந்த சிலிண்டர்கள் பெரிய ஓட்டல்கள், வியாபார நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடியவை. இதன் விலை ரூ.1,000-க்கும் அதிகமாக உள்ளதால் சிறிய ஓட்டல்கள், டீக்கடைகளில் வீட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சமையல் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்துகிறார்கள்.
ரூ.350 மதிப்பிலான சமையல் கியாஸ் சிலிண்டர்களை ரூ.500, ரூ.600 கூடுதல் விலை கொடுத்து வாங்கி தவறாக பயன்படுத்துவதால் எண்ணை நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த முறைகேட்டைத் தவிர்ப்பதற்காகவே சிறிய வகை கியாஸ் சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
5 கிலோ எடையுள்ள இந்த சிலிண்டரை கையில் எளிதாக எடுத்துச்செல்லலாம். குறைவான பயன்பாடு உள்ளவர்கள் இதுபோன்ற சிலிண்டரை ரூ.288.44 கொடுத்து பயன்படுத்தலாம். கியாஸ் சிலிண்டருக்காக பெரிய தொகையை செலவிடத் தேவையில்லை.
இந்த சிறிய வகையிலான கியாஸ் சிலிண்டர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் விற்பனைக்கு வருகிறது. இதற்கான டெபாசிட் ரூ.350. இதை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
சென்னையில் 6 வினியோகஸ்தர்களுக்கும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 30 வினியோகஸ்தர்களுக்கும் இத்தகைய சிறிய சிலிண்டர் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
சென்னை மற்றும் 10 பெரு நகரங்களில் முதல்கட்டமாக இந்த வகை சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன.