அமைச்சர் துரைமுருகனுக்கு நெஞ்சு வலி: திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதி
நாகர்கோவிலில் நேற்று திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். அந்த விழாவில் அமைச்சர் துரைமுருகனும் கலந்து கொண்டார்.
விழா முடிந்தவுடன் முதல்வரும், அவருடன் வந்திருந்த அமைச்சர்களும் இன்று திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் திரும்ப, கார் மூலம் திருவனந்தபுரம் சென்றனர். அமைச்சர் துரைமுருகனும் உடன் சென்றார்.
திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள கேரள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய அமைச்சர் துரைமுருகனுக்கு என்று நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருணாநிதியுடன் கேரள அமைச்சர் சந்திப்பு:
இதற்கிடையே இன்று திருவனந்தபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் கேரள மாநில உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.