குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை எரித்து தாய் தற்கொலை
சுரண்டை: கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை தீ வைத்து எரித்துக் கொன்ற தாய், தானும் தீயில் கருகி இறந்தார்.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள சம்பாவர் வடகரை இந்திராநகர் பத்ரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். டிராக்டர் டிரைவர். இவரது மனைவி பூமாரி. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
சிவா, பவித்ரா என்ற மகன், மகள் இருந்தனர். இந்நிலையில் பூமாரி தனது நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை தந்தை செல்லையாவிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன் கொடுத்து வைத்திருந்தார். இதனையறிந்த முருகன் பூமாரியிடம் அடிக்கடி தகராறு செய்து பணத்தையும், நகையையும் வாங்கி வருமாறு வற்புறுத்தி வந்தார்.
இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இருப்பினும் செல்லையா தனது மகளிடம் வாங்கிய பணத்தையும், நகைகளையும் கொடுக்கவில்லை.
இது சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பூமாரி குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
நேற்று காலை கணவர் முருகன் வயலுக்குச் சென்றவுடன் பூமாரி மகன் சிவா, மகள் பவித்ரா கை, கால்களை துணியால் கட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே கருகி இறந்தனர். சம்பவம் குறித்து அருகில் உள்ள மக்கள் சம்பாவர் வடகரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அம்பை டி.எஸ்.பி., ஆய்குடி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சம்பாவர் வடகரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.